வீர சாவர்க்கர் - அரிய சீர்திருத்தவாதி

1955ல் பிபிசி செய்தி நிறுவனத்துக்கு டாக்டர் அம்பேத்கர் அளித்த ப்ரத்யேக பேட்டியில் நாடு சுதந்திரம் அடைந்ததற்கு உண்மையான காரணம் என்ன என்று கேட்கப்பட்டது.
அதற்கு அவர் பதிலளிக்கையில், 'பிரிட்டீஷார் இவ்வளவு சீக்கிரம் சுதந்திரம் கொடுத்ததற்கு முக்கிய காரணம் நேதாஜியின் இந்திய தேசிய ராணுவம் கொடுத்த நெருக்கடியும், பிரிட்டீஷாரிடம் கைதான இந்திய தேசிய ராணுவ வீரர்களுக்கு ஆதரவாக 1946 பிப்ரவரியில் நடந்த கடற்படை வேலைநிறுத்தமும்தான் நினைக்கிறேன். பிரிட்டிஷ் பிரதமர் அட்லி சுயசரிதை எழுதினால் இப்போது நான் சொல்வதை எழுதுவார்' என்று பதிலளித்தார்.
அவர் இப்படி சொன்ன ஒரே ஆண்டில் அட்லி கொல்கத்தாவுக்கு வந்தார்.
1956ல் இந்தியா வந்த அட்லியை, கோல்கத்தாவில் அப்போதைய ஐகோர்ட் தலைமை நீதிபதியும் பொறுப்பு கவர்னருமான சக்ரவர்த்தி சந்திக்கிறார்.
அப்போது காந்தியின் வெள்ளையனே வெளியேறு இயக்கம் ஒடுக்கப்பட்டு பல ஆண்டுகள் கழித்து, அதன்பிறகு இந்தியாவில் பெரிதாக எந்த போராட்டமும் வெடிக்காத நிலையில் நீங்கள் சுதந்திரம் கொடுத்ததற்கு உண்மையான காரணம் என்ன என்று சக்ரவர்த்தி கேட்கிறார்.
அதற்கு அட்லி, 'நேதாஜியின் இந்திய தேசிய ராணுவம் கொடுத்த நெருக்கடி ஒரு முக்கியமான காரணம் என்று'அட்லி கூறுகிறார்.
இப்படி பிரிட்டீஷாருக்கு இந்திய தேசிய ராணுவம் மூலம் நேதாஜி கொடுத்த நெருக்கடியின் பின்னணியில் இருந்தவர் வீரசாவர்க்கர்.
மதரீதியில் தனிநாடு என்ற கோரிக்கையை ஜின்னா தீவிரமாக முன்னெடுத்த போது அதை தடுக்க விரும்பிய நேதாஜி, இது தொடர்பாக அவர் சில தலைவர்களை சந்தித்து பேச கோல்கத்தாவில் இருந்து புறப்படுகிறார்.
அவர் முதலில் வந்து நின்ற இடம் நாக்பூர் ஆர்.எஸ்.எஸ். அலுவலகம். ஆர்.எஸ்.எஸ். தலைவர் டாக்டர் ஜியை சந்திக்க அவர் வந்திருந்தார். 1940 ஜூன் 20ல் அவர் வந்தபோது டாக்டர் ஜி மரணத் தருவாயில் படுத்த படுக்கையில் இருந்ததால் அவரிடம் எதுவும் பேச முடியாமல் அங்கிருந்து மும்பை செல்கிறார். அங்கு ஜின்னாவை சந்திக்க முயற்சி செய்கிறார். அவரை சந்திக்க ஜின்னா மறுக்கிறார். அங்கிருந்து கோல்கத்தா திரும்பும் வழியில் சாவர்க்கரை நேதாஜி சந்திக்கிறார்.
அப்போதுதான், நேதாஜி யிடம், ராஷ்பிகாரி போஷ் நடத்திவரும் இந்திய தேசிய ராணுவம் குறித்தும், வயது முதுமையால் அந்த அமைப்பை அவரால் நடத்த முடியாமல் அவர் தள்ளாடுவதாகவும் அதற்கு சரியான ஆளை தான் தேடி வருவதாக சாவர்க்கர் கூறுகிறார். மேலும் இந்த பணிக்கு சரியான நபரை தேடியதில் என் முதல் தேர்வு நீங்கள் தான் என்ற தனது திட்டத்தையும் நேதாஜியிடம் சாவர்க்கர் கூறுகிறார்.
இந்த சந்திப்பு நடந்தது 1940 ஜூன் 29.
அங்கிருந்து கோல்கத்தா சென்றவர், ஆப்கன் வழியாக வெளிநாடு சென்று, இந்திய தேசிய ராணுவத்துக்கு தலைமையேற்று இந்தியா நோக்கி படையெடுத்து வந்தார்.
அந்த நெருக்கடி தாளாமல் தான் சுதந்திரம் கொடுத்ததாக அட்லி கூறினார்.
நேதாஜி போன்றவர்களை வழிநடத்திய வீரர் வீரசாவர்க்கர்.
ஈடு இணையற்ற தேசபக்தர்.
சுதந்திர போராட்டத்தில் அவர் காட்டிய தீவிரத்தினால் அவரது பட்டம் திரும்பப் பெறப்பட்டது. பாரிஸ்டர் பட்டம் நிராகரிக்கப்பட்டது. இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு அந்தமான் சிறையில் அடைக்கப்பட்ட போதும் சிறை சுவர்களில் நூற்றுக்கணக்கான விடுதலைக் கவிதைகள் எழுதினார்.
1910ல் இருந்து 21 வரை அந்தமான் சிறை. அதன் பிறகு 24 வரை இந்தியாவில் வெவ்வேறு சிறைகளில் சிறைவாசம். அதன் பிறகு 37வரை வீட்டுக்காவல் என வாழ்நாளில் பெரும்பகுதியை சிறையில் கழித்தவர்.
சுதந்திர போராட்ட வீரராக மட்டுமின்றி சமூக சீர்திருத்த வாதியாகவும் வாழ்ந்தார். தீண்டாமைக்கு எதிராக போராடிய அவர் அந்த காலத்திலேயே ஏராளமான பட்டியலின் மக்களுக்கு பூணூல் அணிவித்து புரட்சி செய்தார். பட்டியலின மக்களை உள்ளடக்கிய அரிஜன்பஜன் மண்டலிகளை உருவாக்கினார். பட்டியலின மக்கள் வேதம் படிக்க தடை என்பதை எதிர்த்தார்.
சுதந்திர போராட்ட வீரராக, இந்து சமுதாயத்தில் நிலவிய தீண்டாமைக்கு எதிராக ஓங்கி குரல் கொடுத்த சீர்திருத்தவாதி யாக வாழ்நாள் முழுவதும் தேசப் பணியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட வீரத்திருமகன் சாவர்க்கரின் பிறந்தநாள் இன்று.( 28/5/19).

Post a Comment

0 Comments