ஒருங்கிணைந்த கல்வியே இன்றைய தேவை - ஆர்.எஸ்.எஸ். தலைவர்


தமிழ் மக்களால் அன்புடன் பெரியவர் என்று போற்றப்பட்ட காஞ்சி மஹாஸ்வாமிகளின் ஒவிய கண்காட்சியை , செவ்வாய் , ஜனவரி 21 அன்று ராஜ கீழ்பாக்கத்தில் வித்யா மந்திர் பள்ளி வளாகத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் திரு மோகன் ஜி பாகவத் அவர்கள் திறந்து வைத்தார். காஞ்சி மடாதிபதி பூஜ்ய ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் நூலை வெளியிட, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் நூலை பெற்றுக் கொண்டார். எளிய தமிழில் அனைத்து சம்ஸ்க்ருத வேதாந்த பாடங்களை கற்று தரும் ஸ்வாமி ஒம்காரணந்தா மற்றும் திரு ஆர் ஏ சங்கர நாராயணன் , M.D & CEO , கனரா வங்கி சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டனர். 

சாமானியர்களுக்கும் புரியவேண்டும் என்பதற்காக உயர்ந்த தத்துவங்களை இனிய தமிழில் எளிய நடையில் எடுத்துறைத்த அவரது சொற்பொழிவுகளின் தொகுப்பான ‘தெய்வத்தின் குரல்’ ஹிந்தியில் வெளியிடப்பட்டது. ஆங்கிலம், மராட்டி, கன்னடம் ஆகிய மொழிகளில் ஏற்கனவே இந்த பள்ளியை நடத்தும் டிரஸ்ட் வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

காஞ்சி மஹாசுவாமிகள் அபார திறமை பெற்றிருந்தார். அவர் இசைத்துறைக்கு சென்றிருந்தால் சிறந்த இசை கலைஞர் ஆகியிருப்பார். அவர் அறிவியல் படிக்க சென்றிருந்தால் சிறந்த விஞ்ஞானி ஆகியிருப்பார். ஆனால் அனைத்து திறமைகளையும் நம் தர்மத்திற்காகவும் சாமன்ய மக்கள் முதல் அனைவரின் நண்மைக்காகவும் அர்ப்பணித்த அவரது தவ வாழ்கையின் அம்சங்கள் ஒவிய கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. நம் நாட்டினை நடந்தே வலம் வந்தது, கடுமையான சூழ்நிலையில் காஞ்சி மடத்தை நிர்வகித்து அதம் மூலம் பல தொண்டு வேலைகள் துவக்கியது போன்றவை 56 ஒவியங்களாக சித்தரிக்கப்பட்டுள்ளன. 

மஹாஸ்வாமி அறக்கட்டளை தலைவர் திரு. பாம்பே சங்கர் தனது வரவேற்புரையில், காஞ்சி மஹாஸ்வாமி பள்ளி தோன்றிய வரலாறு மற்றும் பள்ளி கண்டுள்ள வளர்ச்சி குறித்து குறிப்பிட்டார் . உலகிலுள்ள அனைத்து மக்களின் மனங்களிலும் சூரிய ஒளியை போல் ஊடுருவியவர் காஞ்சி மஹாஸ்வாமி என குறிப்பிட்டார். 


ஆர்.எஸ்.எஸ். சர்சங்கசாலக் மோகன் பாகவத் பேசுகையில் "மஹாஸ்வாமி சனாதன தர்மத்திற்கு வழிகாட்டியாக திகழ்ந்தார், தனது வாழ்க்கை மூலம் பலருக்கு வழிகாட்டினார். இந்த தேசத்தில் தோன்றிய மகான்கள் அனைவருமே கோட்பாடுகளை உரைப்பதுடன் இல்லாமல், வாழ்ந்தும் காட்டினார்கள் . கடவுளை பார்த்திருக்கிறீர்களா என சுவாமி விவேகானந்தர் கேட்டபோது , இப்போது உன்னை காண்பது போல கடவுளை காண்கிறேன் என்று சொன்னார் ராமகிருஷ்ண பரமஹம்சர். அனைவரும் ஒற்றுமையுணர்வுடன் வாழும் போது இணக்கம் ஏற்படுகிறது. உலகமே ஒரே குடும்பம் எனும் இந்த தத்துவம் பாரதத்திற்கு மட்டுமே உரியது. நாம் அனைவரும் சிறந்த மனிதராக வாழ்ந்து வழிகாட்ட வேண்டும். ஒரு ஆசிரியர் தமது வாழ்க்கை மூலம் மாணவர்களுக்கு வழிகாட்டுகிறார் . 

ஆன்மீக உண்மைகளை உணர்ந்த பின்னர், பல முறை ஆராய்ந்து பாருங்கள், பின்னர் அதிலிருந்து விலகாமல் இருங்கள். ஆன்மீகமே இந்தியாவின் ஆன்மா. தர்மமே நம்மை இறைவனை நோக்கி அழைத்து செல்கிறது. நவீன கல்விமுறையுடன் சேர்ந்த ஆன்மீக கல்வியே ஒருங்கிணைந்த கல்வி முறையாகும். இன்றைய சூழலில் இப்படிப்பட்ட ஒருங்கிணைந்த கல்வியே மிகவும் அவசியம். இதன் மூலமே உடல், மனம், கல்வி அனைத்தையும் மாணவர்களுக்கு அளிக்க முடியும். ஒருங்கிணைந்த கல்வியை அளிக்கும் இந்த கல்வி நிறுவனத்திற்கு சிறந்த எதிர்காலம் இருக்கிறது என்பதில் சந்தேகமே இல்லை . இந்த உலகில் அனைத்துமே முன்னேறி வருகிறது. முன்னேற்றம் என்பது இயற்கையை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும். சில சமயம் தர்மம் அதர்மம் போன்றும், அதர்மம் தர்மம் போன்றும் தோன்றும். இதை சரியாக உணர ஆன்மீக ஞானம் அவசியம். என பேசினார். 

பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் பேசுகையில் " சங்கர மடம் மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பிக்கிடையேயான தொடர்பு மிக ஆழமானது. மஹாபெரியவரின் ஆலோசனைகள் குருஜி கோல்வால்கருக்கு உத்வேகம் அளித்தது. சமுதாயத்தை முன்னேற்றவும், தேசத்தை முன்னேற்றவும் ஆர்.எஸ்.எஸ். பெரும் பங்கு வகிக்கிறது. குக்கிராமங்கள், மலை பகுதிகள் முதல் பல ஊர்களில் ஆயிரக்கணக்கான கல்வி நிறுவனங்களை சங்கம் நடத்தி வருகிறது, இதன் மூலம் தேசபக்தி, தெய்வ பக்தி கற்றுத் தரப்படுகிறது. ஆசிரியரே இல்லாத இடங்களில் ஆசிரியர்களை நியமித்து பள்ளிகளை நடத்தி வருகிறது. ஆர்.எஸ்.எஸ். தலைவர் இங்கிருப்பதால் , இந்த ஒருங்கிணைந்த கல்வி முறையினை நாடு முழுவதும் எடுத்து செல்ல முடியும். 

நம் தேச பெருமைகளை நிலை நிறுத்த வேண்டும், பரப்ப வேண்டும். பொருளாதாரம் , விஞ்ஞானம் , மனித நேயம், கலாச்சாரம், பாரம்பரியம் , தாய்மொழி பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டும். இசை, கலாச்சாரம், தேவாரம், திருப்புகழ், ராமாயணம், மஹாபாரதம் போன்றவற்றை அனைவர் மத்தியிலும் எடுத்து செல்ல வேண்டும். இவைகளை கொண்டதே ஒருங்கிணைந்த கல்விமுறை " என ஆசி வழங்கினார் . 

பூஜ்யஸ்ரீ ஓம்காராநந்தா ஸ்வாமிகள் பேசுகையில் "மஹாஸ்வாமிகள் தெய்வத்தின் குரலால், ஹிந்துக்கள் ஹிந்துக்களாகவும், இந்தியர்கள் இந்தியர்களாகவும் வாழ ஆரம்பித்திருக்கிறார்கள். வள்ளுவர் சொல்வது போல கற்க வேண்டியதை முறையாக கற்று அதன்படி நடக்க வேண்டும் . மாணவர்களுக்கு படிக்க சரியான வசதி ஏற்படுத்தி தரும்போது பள்ளியின் மதிப்பு தானாக உயரும், அம்மாணவர்கள் உலகுக்கே வழிகாட்டக் கூடியவர்களாக இருப்பார்கள்" என ஆசி கூறினார். 


திரு மோகன் பாகவத் தெனாலி மஹா பரிக்ஷா வ்யாகரண ஸாஸ்த்திரத்தில் 14 தேர்வுகளில் இளம் வயதில் (16) தேர்ச்சி பெற்ற திரு ப்ரியவ்ரதா பாட்டில் என்பவரை கௌரவித்தார். இவர் ஏழு ஆண்டுகள் படித்து தேர்ச்சி பெற வேண்டிய இந்த ஸாஸ்த்திரத்தை இரண்டே வருடங்களில் நிறைவு செய்தார். மேலும் அப்பள்ளி மாணவர்களின் வேத திறமையை வாழ்த்தினார். 

நிகழ்ச்சி தேசிய கீதத்துடன் நிறைவடைந்தது.

Post a Comment

0 Comments