ஸ்ரீ நாரதர் ஜெயந்தி விழா – திருச்சி 2019


    

விஸ்வ ஸம்வாத் கேந்திரம் தென் தமிழகம் சார்பாக சிறந்த பத்திரிக்கையாளர்களை பெருமைபடுத்தும் பொருட்டு ஸ்ரீ நாரதர் ஜெயந்தி விழா 17.06.2019 திருச்சி ஸ்ரீமதி இந்திராகாந்தி கல்லூரியில் மாலை 6.30 மணி அளவில் நடைபெற்றது. 

விழாவில் திருச்சி தினமலர் ஆசிரியர் முனைவர் ஸ்ரீ ஆர் .ராமசுப்பு ஜி அவர்கள் தலைமை தாங்கி பேசியதாவது “ஒரு செய்தியை அல்லது கதையை கம்ப்யூட்டரில் படிப்பதைவிட புத்தகத்தில் படித்தால் எவ்வளவு சுகம் என்பது படித்து அனுபவித்தவர்களுக்குதான் புரியும். விழாவுக்கு ஏன் நாரதர் ஜெயந்தி என்று பெயர் வைத்தார்கள் என்று சற்று புதிராகவும் , ஆச்சரியமாகவும் இருந்தது . உலகின் முதல் பத்திரிகையாளர் நாரதர் என்று புராண தகவல்கள் கூறுகின்றன . அதனாலோ , என்னவோ பத்திரிகையாளர்களை பாராட்டி விருது வழங்க ' நாரதர் ஜெயந்தி என்று பெயர் வைத்திருப்பார்கள் என்று கருதுகிறேன் . நாரதர் பணி மூவுலகையும் சுற்றி வந்து ஒருவர் பற்றிய செய்திகளை மற்றொருவரிடம் கூறி கலகம் செய்து நன்மையில் முடிவதாக கூறுவதுண்டு. அதுபோல் பத்திரிகைகளில் வரும் சர்ச்சையான பரபரப்பான , விமர்சனத்துக்குள்ளான பலசெய்திகள் கலகத்தில் ஆரம்பித்தாலும் நன்மையில் முடிந்ததற்கு உதாரணமிக்க செய்திகள் உண்டு. ஒருகாலத்தில் மிகப்பெரியதொரு ஊடகமாக பார்க்கப்பட்ட அச்சு ஊடகம் , பின்னாளில் காட்சிஊடகமாக , ஆன்லைன் ஊடகமாக , சமூக ஊடகமாக , மொபைல் ஊடகமாக புதிது , புதிதாக அவதாரம் எடுத்து வருகிறது. என்றார் 
 

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு,சிறந்த பத்திரிக்கையாளர்களுக்கு ‘சந்தேஷ் புரஷ்கார்’ விருதுகள் வழங்கி ஆர்எஸ்எஸ் அமைப்பின் அகில பாரத ஊடக பொறுப்பாளர் ஸ்ரீ அருண்குமார் ஜி அவர்கள் பேசுகையில் , ' ஒரு நாட்டின் சமுதாயத்தை கெடுக்க வேண்டும் என்றால் அங்கு வாழும் மக்களின் பெருமைகளையும் , வரலாற்றையும் மறக்கடிக்க செய்தாலே போதும். அது தான் இன்று நடந்து க்கொண்டிருக்கிறது. . நாரதர் ஜெயந்தி விழா ' என்று கூறினால் , இது என்ன ஆர்எஸ்எஸ் புதிதாக கண்டுபிடித்ததா என்கிறார்கள் . நாரதர் பிறந்த நாளில் தான் நாட்டின் முதல் பத்திரிகையானது கோல்கத்தாவில் தொடங்கப்பட்டது. 1924-ம் ஆண்டு வங்காள மொழியில் வெளிவந்த உத்தண்ட மார்த்தாண்ட என்ற இதழில், நாரதரே உலகின் முதல் பத்திரிகையாளர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. நாரதர் போல் நாட்டுக்கு நல்ல செய்திகளைதருவதே எங்கள் நோக்கம் என்று அறிவிப்புடனே அந்த நாளிதழ் வெளியானது . உத்தரபிரதேசத்தில் நாட்டின் முதல் செய்தி ஏஜென்சி தொடங்கப்பட்டபோது அந்த மாநில கவர்னராக இருந்த சரோஜினி நாயுடு விடுத்த வாழ்த்து செய்தியில் உலகின் முதல் செய்தியாளரான நாரதர் வழிநின்று நாடு வளம்பெறும் வகையில் செய்திகளை வெளியிட வேண்டும் என்று அறிவுறுத்தினார். அந்தகைய வரலாற்றை மறந்துவிட்டு நாரதர் - ஜெயந்தி விழா என்றவுடன் கிண்டல் கேலி செய்து கொண்டிருக்கிறார்கள். தர்மத்தின் அடிப்படையில் இந்த நாடு கட்டமைக்கப் பட்டுள்ளது.அதை மூடி மறக்கும் போது அடிப்படையையே மறந்துவிடுகிறோம் . தேசம் மாறிவிடுகிறது . இது பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியமாகிறது. யாரையும் வெறுத்து ஒதுக்காமல் , யாருக்கும் அஞ்சாமல் செய்திகளை உடனே வெளியிட வேண்டும்..பத்திரிகையாளர்கள் எளிமையானவர்களாக , எவரும் எளிதில் அணுகக்கூடியவர் களாக இருக்கவேண்டும். அத்தகைய பத்திரிக்கையாளர்களை தேர்வு செய்து நாரதர் ஜெயந்தி விழாவில் விருது வழங்கியது பாராட்டுக்குரியது என்றார். 

நிகழ்ச்சியில் , தமிழக அரசியல் இதழ் பதிப்பாளர் மற்றும் ஆசிரியர் திரிசக்தி சுந்தர்ராமன் ( எ ) கார்கோடன் , தினசரி டாட் காம் இணைய இதழ் ஆசிரியர் செங்கோட்டை ஸ்ரீராம் , வளம் பத்திரிகை முதன்மை ஆசிரியர் ஹரன் பிரசன்னா ஆகியோருக்கு ‘சந்தேஷ் புரஷ்கார்’ விருது வழங்கப்பட்டது. மூத்த பத்திரிகையாளர் பிரேமா நந்தகுமார் அவர்கள் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடக்கி வைத்தார். ஆர்எஸ்எஸ் தென் பாரத செயலாளர் ஸ்ரீ ராஜேந்திரன் ஜி அவர்கள் ,திருச்சி கோட்ட தலைவர் ஸ்ரீ செல்லதுரை ஜி அவர்களும் பத்திரிக்கையாளர்களும் கலந்து கொண்டனர். முன்னதாக ஆர்எஸ்எஸ் தென் மாநில செய்தி தொடர்பாளர் ஸ்ரீ கிருஷ்ண முத்துசாமி ஜி அவர்கள் அனைவரையும் வரவேற்றார். விஸ்வ ஸம்வாத் கேந்திரம் தென் தமிழக பொறுப்பாளர் ராம்நாத் நன்றி கூறினார். 



Post a Comment

0 Comments