இன்றைய தினமலர் நாளிதழில் ‘கிரிவலப் பாதை பணிகளின் உண்மை நிலவரம் என்ன’ என்ற தலைப்பில் செய்தி ஒன்றினை பிரசுரம் செய்துள்ளீர்கள். அதில் “ஆர்.எஸ்.எஸ்.மனு” என்ற தலைப்பில் ஒரு பெட்டி செய்தியையும் கட்டம்கட்டி வாசகர்கள் கவனத்தை ஈர்க்கும் படி பிரசுரம் செய்துள்ளீர்கள். செய்தியில் குறிப்பிட்டுள்ள சங்கர் என்பவர் ஆர்.எஸ்.எஸ். மாநில செயலாளர் என்று கூறியிருப்பது முற்றிலும் தவறான தகவலாகும். மேலும் அவர் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் எந்த ஒரு பொறுப்பிலும் இல்லை. திருவண்ணாமலை கிரிவலப்பாதையை சுற்றியுள்ள மரங்களை வெட்ட வேண்டுமா? வெட்ட வேண்டாமா? போன்ற சர்ச்சைகள் எதிலும் ஆர்.எஸ்.எஸ். ஈடுபடவில்லை. திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் மரம் வெட்ட வேண்டும் என்று கோரி பசுமைத் தீர்ப்பாயத்தில் ஆர்.எஸ்.எஸ். சார்பில் எந்த ஒரு வழக்கும் தொடுக்கப்படவில்லை. வழக்குத் தொடுக்க முயற்சி செய்துவரும் திருவண்ணாமலையை சேர்ந்த சங்கர் என்பவரும், அவர் சார்பில் பசுமைத்தீர்ப்பாய நீதிபதியிடம் மனுதாக்கல் செய்துள்ள வழக்கறிஞர் சங்கமித்திரையும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் பெயரை தவறாகப் பயன் படுத்தியுள்ளனர். இயற்கையையும் சுற்று சூழலையும் பாதுகாத்திட வேண்டும் என்பதில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்திற்கு மாற்றுக் கருத்து எதுவும் கிடையாது. ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் சார்பு இயக்கத்தினர் நாடு முழுவதும் பல லட்சக்கணக்கான மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வரும் வேளையில் இந்தமாதிரி தவறான செய்தியானது பொதுமக்களிடையே இயக்கத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்திடும். எனவே மேற்கண்ட அறிக்கையினை தினமலர் நாளிதழில் பிரசுரம் செய்திட வேண்டுமே கேட்டுக்கொள்கிறேன்.
நா.சடகோபன்
நா.சடகோபன்


0 Comments